புதன், 31 அக்டோபர், 2018

உலகின் மிக உயரமான படேல் சிலை : 10 சிறப்பம்சங்கள்


உலகின் மிக உயரமான படேல் சிலை : 10 சிறப்பம்சங்கள்

புதுடில்லி : சர்தார் வல்லபாய் படேலின் 143 வது பிறந்தநாளை முன்னிட்டு, ஒற்றுமையின் அடையாளமாக குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான 182 மீட்டர் உயரம் கொண்ட படேலின் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.
படேல் சிலையின் சிறப்பம்சங்கள் :
1. குஜராத்தின் நர்மதா அணை அருகே 3.2 கி.மீ., தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள படேலின் சிலை ரூ.2389 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை அமெரிக்காவின் சுதந்திரா தேவி சிலையை விட 3 மடங்கு உயரமானது.
2. இந்தியாவின் இரும்பு மனிதர் என புகழப்படும் நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான படேலுக்கு நாடு முழுவதிலும் இருந்து இரும்பு சேகரிக்கப்பட்டு இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
3. பத்மபூஷண் விருது பெற்ற ராம் வி.சுதர் என்ற சிற்ப கலைஞரால் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனமும், குஜராத்தின் சர்தார் சரோவர் நர்மதா நிஜாம் லிமிடெட் நிறுவனமும் இணைந்து இந்த சிலையை உருவாக்கி உள்ளன. 250 இன்ஜினியர்கள், 3400 தொழிலாளர்கள் இணைந்து 33 மாதங்களில் இந்த சிலையை உருவாக்கி உள்ளனர்.
4. ஒற்றுமையின் சின்னமாக 597 அடி உயரம் கொண்ட இந்த சிலை, தற்போது உலகின் மிக உயரமான சிலையாக கருதப்படும் சீனாவின் புத்தர் கோயில் சிலையை விட உயரமானது.
5. இந்த சிலை 553 வெண்கல பகுதிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் 10 முதல் 15 நுண்ணிய பகுதிகளை கொண்டதாகும். இந்த பகுதிகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, கட்டமைக்கப்பட்டுள்ளது. கான்க்ரீட்டால் அமைக்கப்பட்டுள்ள இந்த அடிப்பகுதி பிரத்யேக வடிவமைப்பை கொண்டுள்ளது இதன் மற்றொரு தனிச்சிறப்பாகும்.
6. சர்வதேச முறையில் உருவாக்கப்பட்ட இந்த வெண்கல பகுதிகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இத்தகைய வெண்கல பகுதிகளை உருவாக்கும் வசதி இந்தியாவில் இல்லை என்பதால் சீனாவில் உருவாக்கப்பட்டு, இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளன.
7. இந்த சிலையில் ஒரே நேரத்தில் 200 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் 135 மீட்டர் உயரத்தில் பார்வையாளர் மாடம்அமைக்கப்பட்டுள்ளது.
8. படேலின் சிலையின் அடிபாகத்தில் அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகமும் இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.
9. இந்த அருங்காட்சியகத்தில் படேலின் வாழ்க்கை குறித்த 40,000 ஆவணங்கள், 2,000 புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் ஆராய்ச்சி மையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
10. இந்த சிலை திறக்கப்பட்ட பிறகு, இதனை காண தினமும் 15,000 பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக