வெள்ளி, 3 ஏப்ரல், 2020

சில தினமும் கூறப்படும் இரட்டை சொற்களும் அவற்றின் அர்த்தங்களும்

சில தினமும் கூறப்படும் இரட்டை சொற்களும் அவற்றின் அர்த்தங்களும்:-

 *குண்டக்க மண்டக்க.*                          குண்டக்க-இடுப்புப்பகுதி.மண்டக்க-தலைப்பகுதி.
சிறுவர்கள் கால்பக்கம்,தலைப்பக்கம்
பார்க்காமல் தூங்குவார்கள்.
அதுபோல் வீட்டில் பொருள்கள் சிதறி,
மாறி இருத்தலே
குண்டக்க மண்டக்க என்பதற்கு பொருள்.
                                                           *அந்தி சந்தி.*
                             அந்தி_மாலைக்கும்
இரவுக்கும் இடையில்உள்ள பொழுது.
சந்தி_இரவுக்கும் காலைக்கும்
இடையில் உள்ள விடியல் பொழுது.

 *அக்குவேர் ஆணிவேர்*

அக்குவேர்_செடியின் கீழ் உள்ள
மெல்லியவேர்.
ஆணிவேர்_செடியின் கீழ் ஆழமாக
செல்லும் உறுதியான வேர்.

 *அரை குறை*

அரை-ஒரு பொருளில் சரிபாதி அளவு.
குறை-அந்த சரிபாதியளவில்
குறைவாக உள்ளது குறை.
(உ-ம்.)அரை குறை வேலை.

 *அக்கம்பக்கம்.*

அக்கம்-தன்வீடும்,தான்இருக்கும் இடமும்.
பக்கம்-பக்கத்துவீடும் பக்கத்தில் உள்ள இடமும். 
                                                               *கார சாரம்*

காரம்-உறைப்புச்சுவை.
சாரம்-சார்ந்தது.(காரம்
சார்ந்த பிற சுவைகள்)

 *இசகுபிசகு.*

இசகு-தம் இயல்பு
தெரிந்து,ஏமாற்றுபவனிடம்
ஏமாறுதல்.
பிசகு-தம்முடைய
அறியாமையால் ஏமாறுதல்.
(உ-ம் )இசகு பிசகாக மாட்டிக்கொண்டார்.

 *இடக்கு முடக்கு*

இடக்கு--எள்ளி நகைத்தும்,
இகழ்ந்தும் பேசுதல்.
முடக்கு--கடுமையாக எதிர்த்தும்,
தடுத்தும் பேசுதல்.

 *ஆட்ட பாட்டம்*

ஆட்டம்--தாளத்திற்குப் பொருந்தியோ/பொருந்தாமலோ ஆடுவது.
பாட்டம்--ஆட்டத்திற்குப்
பொருந்தியோ/பொருந்தாமலோ
பாடுவது.

 *அலுப்பு  சலிப்பு*

அலுப்பு-உடலில் உண்டாகும் வலியும்
குடைச்சலும்.
சலிப்பு-உள்ளத்தில் ஏற்படும்
வெறுப்பும் சோர்வும்.

 *1.தோட்டம் துரவு.*
*2.தோப்பு துரவு.*
தோட்டம் -செடி,கொடி கீரை பயிரிடப்படும் இடம்.தோப்பு-மரங்களின் தொகுப்பு.
துரவு--கிணறு

 *காடு கரை.*

காடு-மேட்டுநிலம்
(முல்லை).

கரை-வயல் நிலம்(மருதம்-
நன்செய்,புன்செய்)

 *காவும் கழனியும்.*

கா--சோலை.
கழனி--வயல்.
(மருதம் சார்ந்த நிலப்பகுதி)

 *நத்தம் புறம்போக்கு.*

நத்தம்--ஊருக்குப் பொதுவாகிய
மந்தை.(ஊருக்குப் பக்கத்தில் இருக்கும்)
புறம்போக்கு--ஆடு மாடு மேய்வதற்காக அரசு
ஒதுக்கிய புல்நிலம்.(ஊர் கடந்து தூரத்தில் இருக்கும்.)

 *பழக்க வழக்கம்.*

பழக்கம்--ஒருவர் ஒரு
செயலைப்  பலகாலம்
செய்து வருவது.
வழக்கம்--பலர் ஒரு செயலைப்
பலகாலம் கடைபிடித்து வருவது.(மரபு)

 *சத்திரம் சாவடி.*

சத்திரம்--இலவசமாக சோறு போடும் இடம்(விடுதி).
சாவடி--இலவசமாக தங்கும் இடம்(விடுதி).

 *நொண்டி நொடம்.*

நொண்டி--காலில் அடிப்பட்டோ அல்லது அடிபடாமலோ ,ஒரு குறையால் நொண்டி நடப்பவர்.
நொடம்--கை முடங்கி,அதனால் கையின் செயல் அற்றவர்(நுடம்,முடம்)

 *பற்று பாசம்.*

பற்று--நெருக்கமாக உறவாடி இருத்தல்.
பாசம்--பிரிவில்லாமல்
சேர்ந்தே இருத்தல்.

 *ஏட்டிக்குப் போட்டி.*

ஏட்டி-விரும்பும் பொருள் அல்லது செயல்.
(ஏடம்--விருப்பம்.)
போட்டி--விரும்பும் பொருள் அல்லது
செயலுக்கு எதிராக  வரும் ஒன்று.

 *கிண்டலும் கேலியும்.*

கிண்டல்--ஒருவன் மறைத்தச் செய்தியை அவன் வாயில் இருந்தே
பிடுங்குதல்.(கிண்டி தெரிந்து கொள்ளுதல்).
கேலி--எள்ளி நகையாடுதல்.

 *ஒட்டு உறவு.*

ஒட்டு--இரத்தச்சம்பந்தம் உடையவர்கள்.(தாய்,தந்தை,
உடன்பிறந்தவர்கள்,மக்கள்)
உறவு--பெண் கொடுத்த  அல்லது
பெண் எடுத்த வகையில் நெருக்கமானவர்கள்.
     
 *பட்டி தொட்டி.*
                                                            பட்டி---மிகுதியாக
ஆடுகள் வளர்க்கப்படும் இடம்(ஊர்).
தொட்டி---மாடுகள் மிகுதியாக வளர்க்கப்படும் இடம்(ஊர்).

 *கடை  கண்ணி.*

கடை---தனித்தனியாக அமைந்த வியாபார(வணிக)நிலையம்.
கண்ணி-----தொடர்ச்சியாக கடைகள் அமைந்த
கடைவீதி.
                                                                *பேரும் புகழும்.*                                                         
   பேர்--வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பும் பெருமையும்.
புகழ்--வாழ்விற்குப் பிறகும்
 நிலைப்பெற்றிருக்கும் பெருமை.

 *நேரம் காலம்.*

நேரம்--ஒரு செயலைச்
செய்வதற்கு நமக்கு வசதியாக
(Time) அமைந்த பொழுது.
காலம்--ஒரு செயலைச்
செய்வதற்கு  பஞ்சாங்க அடிப்படையில்
எடுத்துக்கொள்ளும் கால அளவு நிலை.

 *பழி பாவம்.*

பழி---நமக்கு தேவையில்லாத,
பொருந்தாத செயலைச்
செய்ததால்,இப்பிறப்பில்
உண்டாகும் பழிப்பு.
பாவம்---தீயசெயல்களைச்
செய்ததால் மறுபிறப்பில்
நாம் அனுபவிக்கும் தீய நிகழ்வுகள்.

 *கூச்சலும் குழப்பமும்.*

கூச்சல்--துன்பத்தில் சிக்கி உள்ளோர் போடும்
அவல  ஒலி (ஓலம்).
கூ--கூவுதல்.
----
குழப்பம் --அவல ஒலியைக் கேட்டு அங்கு வந்தவர்கள் போடும் இரைச்சல்..

 *நகை நட்டு.*

நகை--பெரிய அணிகலங்களைக்
குறிக்கும்.(அட்டியல்,ஒட்டியாணம்,சங்கிலி).
நட்டு---சிறிய அணிகலன்களைக்குறிக்கும்.
(திருகு உள்ள தோடு,காப்பு,கொப்பு).

 *பிள்ளை குட்டி.*

பிள்ளை--(பொதுப்பெயர்)
இருப்பினும் ஆண் குழந்தையைக் குறிக்கும்.
குட்டி---இது பெண் குழந்தையைக்
குறிக்கும்.

 *பங்கு பாகம்*
பங்கு--கையிருப்பு பணம்,நகை,பாத்திரங்களைப்பிரித்தல்.(அசையும் சொத்து)
பாகம்--வீடு,மனை,நிலபுலன்களைப் பிரித்தல்,(அசையா சொத்து)

 *வாட்ட  சாட்டம்.*

வாட்டம்-வளமான தோற்றம்,வாளிப்பான உடல் ,
அதற்கேற்ப உயரம்.
சாட்டம்--உடல்(சட்டகம்),வளமுள்ள கனம்.
தோற்றப் பொலிவு.   
                                                                *காய்கறி.*

காய்---காய்களின் வகைகள்.
கறி--
(சைவ உணவில் )கறிக்கு உபயோகப்
படுத்தப்படும் கிழங்கு வகைகளும்,கீரை வகைகளும்.

 *கால்வாய்-வாய்க்கால்*

வாய்--குளம்.
கால்வாய்--குளத்திற்கு
தண்ணீர் வரும் கால்.(பாதை).
வாய்க்கால்--குளத்திலிருந்து
தண்ணீர் செல்லும் கால்.(பாதை)
பாதை என்பது நீர்வழிப்பாதையைக்குறிக்கும்.

 *ஈவு இரக்கம்.*
ஈவு--(ஈதல்).கொடை வழங்குதல்.
இரக்கம்---(அருள்).
பிற உயிர்களின்மேல்
அருள் புரிதல்.
                                                  *பொய்யும் புரட்டும்.*

பொய்---உண்மை இல்லாததைக்கூறுவது.
புரட்டு-- ஒன்றை நேருக்கு மாறாக
மாற்றி ,உண்மைபோல் நம்பும்படியாக கூறுவது.

*சூடு சொரணை.*

சூடு--ஒருவர் தகாத சொல்லைப்
பேசும்போது/தகாத செயலைச்செய்யும் போது நமக்கு ஏற்படும்
மனக்கொதிப்பு(மனவெதுப்பு,எரிச்சல்).
சொரணை--நமக்கு ஏற்படும் மான உணர்வு.
                                                       *பட்டம், விருது.*
பட்டம்-- கல்லூரி , பல்கலைக்கழகம் இவற்றல் படித்து பெறுவது.
பெயருக்கு ப்பின்னால்‌ இடம் பெறும்.
விருது--தகுதி அடிப்படையில் வழங்கப்படுவது.இது
பெயருக்கு முன்னால் இடம்பெறும்.
------------ -------------.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக