சனி, 28 டிசம்பர், 2019

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் எளிமை..!!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பற்றிய முந்தைய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் எளிமை..!!


🌟சிறுவயதில் பேச்சு வராமல் சிரமப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், எப்போதும் எதையாவது சிந்திப்பதிலேயே கவனத்தை செலுத்தினார். அப்படி ஒருமுறை ஐன்ஸ்டீன், எதையோ தனிமையில் உட்கார்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.

🌟இதை கண்ட அவரது உறவினர் ஒருவர், 'உன் மகன் ஆல்பர்ட்டை பார்... எதையோ ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான். அவன் ஓர் ஆராய்ச்சியாளன்... ஒரு சிந்தனையாளன்..." என்று நக்கலாக சொல்லிவிட்டார்.

🌟அவ்வளவுதான், ஐன்ஸ்டீனின் தாயிற்கு கோபம் தலைக்கேறிவிட்டது. எந்த தாய், தன் பிள்ளையை விட்டுக்கொடுப்பாள்? காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதுபோல... அவரை விட்டு வைக்கவில்லை.

🌟'அவன் ஒரு சிறந்த சிந்தனையாளன்... அறிவாளி... அதனால்தான் அடக்கமாக இருக்கிறான். எதிர்காலத்தில் அவன் ஒரு புகழ்பெற்ற பேராசிரியனாக திகழப்போகிறான்" என்றார்.

🌟ஐன்ஸ்டீனின் அன்னை அவ்வாறு சொன்னது அந்த உறவினருக்கு முகத்தில் அறைந்தது போன்று இருந்தது...!!

🌟அன்று ஐன்ஸ்டீனின் அன்னை சொன்னது... நூற்றுக்கு நூறு உண்மை ஆயிற்று. ஆம், பிற்காலத்தில் அவர் எல்லா நாட்டவரும் போற்றும்படியாக வாழ்ந்த மிகச்சிறந்த சிந்தனையாளராக, சாகும்வரை அடக்கத்துடனும், எளிமையுடனும் வாழ்ந்தார்.

🌟ஆடைகள் அணிவதிலும், அலங்காரம் செய்வதிலும் அவர் அலட்சியமாகவே இருப்பார். அழுக்கு ஆடையை பல நாட்கள்கூட அணிந்திருப்பார். வெட்டப்படாத தலைமுடியுடன் வீதிகளிலும், விழாக்களிலும் வலம் வருவார். சில நேரங்களில் செருப்பில்லாமலும், மேலங்கி அணியாமலும் கூட வெளியே செல்வாராம்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கேட்கும் சந்தேகம்...


ஐன்ஸ்டீனின் சந்தேகம்... பேச்சா... ஆடையா?... திகைத்த மனைவி..!!


🌟எளிமையான மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஓரிடத்திற்கு ஒருமுறை சொற்பொழிவாற்ற சென்றிருந்தார். அப்போது... அவருடன், அவர் மனைவி எல்சாவால் செல்ல முடியவில்லை.

🌟ஆதலால், தம் கணவருக்கு வேண்டிய நல்ல ஆடைகளை எடுத்து, ஒரு பெட்டியில் வைத்து அதை அவரிடம் கொடுத்து, 'இந்தப் பெட்டியில் நல்ல உடைகளை வைத்திருக்கிறேன். சொற்பொழிவுக்கு செல்லும்போது நீங்கள் மறந்துவிடாமல், அவைகளை எடுத்து அணிந்து கொள்ளுங்கள்" என்றார்.

🌟தன் மனைவி சொன்னதை அப்படியே கேட்டுக்கொண்ட ஐன்ஸ்டீன், நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தார். கணவரைக் கண்டு மகிழ்ச்சியடைந்த எல்சா, தாம் கொடுத்து அனுப்பிய பெட்டியை வாங்கி திறந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார்.

🌟எல்சா கொடுத்து அனுப்பிய ஆடைகள் அப்படியே இருந்தன. கோபமடைந்த எல்சா, தன் கணவரிடம், 'ஏன் இந்த ஆடைகள் அடுக்கி வைத்தபடியே இருக்கின்றன... அவைகளை நீங்கள் அணிந்து கொள்ளவில்லையா?" என்றார்.

🌟எல்சா கேட்டதை கண்டு கொஞ்சமும் கவலையடையாத ஐன்ஸ்டீன், சிரித்துக்கொண்டே அவரிடம்... 'அடடா, எனக்கு மறந்தே போய்விட்டது. நீ கோபித்துக்கொள்ள வேண்டாம்" என்றவர், 'அது இருக்கட்டும்... ஆனாலும், எனக்கு ஒரு சந்தேகம்" என்று அவரிடம் ஒரு கேள்வியை வைத்தார்.

🌟'எல்லோரும் என் பேச்சை கேட்க வருகிறார்களா? அல்லது என் ஆடையை பார்க்க வருகிறார்களா?" என்பதே அது. பாவம் எல்சாவால் அதற்கு பதில் சொல்லவே முடியவில்லை.

🌟வாழ்க்கை என்பது இரண்டு நிலைகள்தான். ஏற்றமும், தாழ்வுமே. அதில், சரியாகப் பயணிப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். இந்த வெற்றியின் பயணத்தில் ஐன்ஸ்டீனின் வாழ்வும் அடங்கும்.

🌟இன்பமும், துன்பமும் அவரை எதிர்கொண்டபோது, எந்த சூழலிலும் தன் வழியை மாற்றிக்கொள்ளாதவர். அதனால்தான் அவருக்கு மிக உயர்ந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது.

🌟'எதை நான் விரும்பவில்லையோ, அது என்னைத் தேடி வருகிறது" என்று முணுமுணுத்தார். அத்துடன், தன் மனைவி எல்சாவிடம்... 'இந்த பணம் நமக்கு தேவையில்லை. பாதி தொகையை தர்ம காரியங்களுக்கும், மீதித் தொகையை மிலவாவுக்கும் (ஐன்ஸ்டீனின் முதல் மனைவி) கொடுத்துவிடலாம்" என்றார். அவர் கருத்துக்கு என்றுமே மறுப்பு சொன்னதில்லை எல்சா. அதனால்தான், அவர்களுடைய இல்லற வாழ்க்கை இனித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக