ஞாயிறு, 19 ஜனவரி, 2020

போலியோ சொட்டு மருந்து ஏன் கட்டாயம் அளிக்க வேண்டும்..?


   
போலியோ சொட்டு மருந்து ஏன் கட்டாயம் அளிக்க வேண்டும்..?

போலியோ இல்லாத இந்தியா என இன்று  பெருமையுடன் சொல்லிக் கொள்கிறோம் என்றால் அதற்கு போலியோ சொட்டு மருந்துகளே காரணம்.

ஆனாலும் இன்றும் நைஜீரியா, பாக்கிஸ்தான் , ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் போலியோ தாக்கம் இருக்கிறது என்றாலும் அதற்கு முறையான மருத்துவ பாதுகாப்புகள் அளிக்கப்படாததே காரணம் என்றே சொல்லலாம்.

இப்படி முறையான மருத்துவ பாதுகாப்பை உறுதி செய்து போலியோ இல்லாத பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது என்றால் அது பெரும் சாதனையே.

இதற்காக அரசாங்கமும் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல.

 இருப்பினும் சிலர் சொட்டு மருந்து ஏன் அவசியம் என்பதை தெரியாமலேயே சொட்டு மருந்து அளிக்கின்றனர். சிலர் கொடுக்காமலும் விடுகின்றனர்.

சொட்டு மருந்து ஏன்? என்று தெரியாமல் போடும் பெற்றோர்களை விட போடாமலேயே தவிர்க்கின்றவர்களுக்காகவே இந்த விளக்கம்.

போலியோ வைரஸ் என்பது நம் உடலின் தொண்டை, குடல் பகுதியில் தங்கியிருக்கும் மிகவும் மோசமான கிருமி.

 இது மலம் கழித்தலின் மூலமாகவோ அல்லது சளி, வாந்தி, எச்சில் மூலமாக காற்றில் பரவி மற்றவர்களுக்கு தொற்று நோயை உண்டாக்கும்.

 அவர்களுக்கு பக்கவாதம், நிரந்தரமாக உடல் உறுப்புகள் செயலிழத்தல் ஏன்..சிலருக்கு மரணம் கூட ஏற்படக் கூடும்.

இந்த போலியோ வைரஸை முற்றிலும் அழிக்க முடியாது என்றாலும், அதைக் செயலிழக்கச் செய்து கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் கண்டுபிடிக்கப்பட்டதே இந்த போலியோ தடுப்பு சொட்டு மருந்து.

இதை சரியாக எடுத்துக் கொள்வதன் மூலம் போலியோ பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

எனவேதான் அரசாங்கமே முன் வந்து ஒவ்வொரு வருடமும் முகாம்கள் அமைத்து இலவசமாக போலியோ சொட்டு மருந்தை அளிக்கிறது. இது ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.


 எனவே நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க மறவாதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக