ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

கண் இமைக்காமல் பார்க்கத் தோன்றும்.... வானவில் மலை!!


கண் இமைக்காமல் பார்க்கத் தோன்றும்.... வானவில் மலை!!

🌈நீங்கள் பசுமையான மலைத்தொடர்களையும், பனிப்படர்ந்த மலைத்தொடர்களையும் நேரடியாகவோ, புகைப்படத்திலோ பார்த்திருப்பீர்கள்.

🌈ஆனால், இன்று நாம் பார்க்கப்போவது நீங்கள் இதுவரை நேரில் பார்த்திராத, யாரும் சொல்லி கேட்டிராத விநோதமான... வித்தியாசமான... மலைத்தொடரைப் பற்றி தான்.

🌈பெரு நாட்டை பிரம்மிக்க வைக்கும் மலைகளின் தேசம் என்றே சொல்லலாம். மதியை மயக்கக்கூடிய பல மலைத்தொடர்கள் இங்கு அமைந்துள்ளன.

🌈அந்த வகையில், பெரு நாட்டின் முக்கியமான மலைத்தொடர்களில் ஒன்று வினிகுன்கா மலை.

🌈அதில் அப்படி என்ன விஷேசம் இருக்கிறது? வாங்க பார்க்கலாம்...


🌈பெரு நாட்டின் கஸ்கோ பகுதிக்கு அருகில் அமைந்துள்ள வினிகுன்கா மலைத்தொடர் அதன் தோற்றத்தால் அனைவரையும் பிரம்மிக்க வைக்கிறது.

🌈இதற்கு முக்கிய காரணமே இந்த மலையின் நிறம்தான். ஏனெனில், கண் இமைக்காமல் பார்க்கத் தோன்றும் அளவிற்கு எழில் மிகுந்து காட்சியளிக்கும் இந்த மலையை காண்பவர்கள் கண்டிப்பாக பிரம்மித்து போவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

🌈நீலம், பிரவுன், மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்பு என பல்வேறு வண்ணங்களில் வானவில் மலையாய் காட்சியளிப்பதால் இம்மலையை வானவில் மலை என்றே மக்கள் அழைக்கின்றார்கள்.


🌈தென் அமெரிக்க கண்டத்தில் காணப்படும் ஆண்டிஸ் மலைத்தொடரின் ஒரு பகுதியில்தான் இந்த வானவில் மலைத்தொடர்கள் காணப்படுகின்றன. பெருவின் அசுங்கேட் மலைப்பகுதியில் இவை அமைந்துள்ளது.

🌈பார்த்தவுடனே மனதைப் பறிகொடுக்கும் அளவுக்கு பல நிறங்களில் காட்சியளிக்கும்... கொள்ளை அழகுக்கொண்ட இம்மலையை காண சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

🌈இந்த மலை பனி படர்ந்தே 2013ஆம் ஆண்டுவரை காணப்பட்டதாகவும், அதற்கு பின்னர் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணமாக தான் பனி உருகி, மலை பல்வேறு வண்ணங்களில் காட்சியளிப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.


🌈வினிகுன்கா மலை வானவில் மலையாக காட்சியளிப்பதற்கு காரணம் இம்மலையிலுள்ள பல்வேறு விதமான தாதுக்கள் தான்.

🌈ஏனெனில், இந்த தாதுக்கள் மழைநீருடன் கலக்கும்போது மலைகள் பலவிதமான வண்ணங்களாக காட்சியளிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

🌈இம்மலையைப் பற்றி படிக்கும்போதே உங்களுக்கு இந்த மலையை பார்க்க வேண்டும் என்று ஆசையா இருக்கா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக